twitter

தினமணிக் கதிரிலிருந்து தகவலுக்காக....
ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது ஒரு மனிதனுக்கு புதியதோர் உலகத்தைத் திறந்துவிடுவதைப் போன்றது. அதிலும் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதினால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றால் புதிய வாழ்க்கைக்கான நுழைவாயிலாகவே அந்த மொழி மாறிவிடுகிறது. உலகமெங்கும் தனது நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது ஜப்பான். ஜப்பான் நிறுவனங்களில் வேலை செய்ய ஜப்பானிய மொழி கற்றுக் கொள்வது அவசியம். ஜப்பானிய மொழியைக் கற்றுத் தரும் நிறுவனம் ஒன்று சென்னை அண்ணாநகரில் எஸ் அன்ட் என் ஹயகாவா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.ஹயகாவா. அவரைச் சந்தித்துப் பேசினோம்.

ஜெ.ஹயகாவா
ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு வேலைவாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது?
ஜப்பான் நாட்டின் ஸôஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர். ஸôஃப்ட்வேர் மட்டுமில்லை, ஆட்டோமொபைல், எலக்ட்ரிகல், பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி ஆகிய துறைகளில் ஜப்பானிய நிறுவனங்களுக்கு நிறையப் பேர் தேவைப்படுகின்றனர். இதற்குக் காரணம், ஜப்பான் மக்களுக்கு ஜப்பானிய மொழி ஒன்றுமட்டுமே தெரியும். ஆனால் ஜப்பான் நாட்டு தொழில்களும் நிறுவனங்களும் உலகம் முழுவதும் இருக்கின்றன. அவை சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் ஆங்கிலமும், ஜப்பானிய மொழியும் தெரிந்தவர்கள் தேவை. இந்தியாவில் மாணவர்களுக்கு ஏற்கனவே ஆங்கிலம் தெரியும். எனவே அவர்களுக்கு ஜப்பானிய மொழி தெரிந்திருந்தால் ஜப்பானிய நிறுவனங்களில் எளிதில் வேலை கிடைத்துவிடும் சூழல் உள்ளது.

கம்ப்யூட்டர், பொறியியல் படிப்பு தவிர, பிற படிப்பு படித்த மாணவர்களுக்கும் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு உள்ளது. உதாரணமாக பிஏ ஆங்கிலம் படித்த ஒருவர் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டால் ஃபிரண்ட் ஆபிஸ் மேனேஜ்மென்ட் பணிகளில் ஈடுபட முடியும். இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் ஆர்வம் காட்டிவருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஜப்பானிய நிறுவனங்கள் 25 க்கும் மேல் உள்ளன. இன்னும் நிறையத் தொழிலகங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்திய மாணவர்கள் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.

ஜப்பானிய மொழியை எந்த எந்த இடங்களில் கற்றுத் தருகிறீர்கள்?
நாங்கள் முதன் முதலில் 2005 - இல் மதுரையில் உள்ள டிவிஎஸ் பள்ளியில்தான் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொடுத்தோம். அந்தப் பள்ளியில் படிக்கும் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். அதன்பின் சென்னை ஆவடியிலுள்ள வேல்டெக் என்ஜினியரிங் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பொறியியல் மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறோம். ஹெச்சிஎல் போன்ற நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும் ஜப்பானிய மொழியைக் கற்றுத் தருகிறோம்.

தனிநபர்களுக்குக் கற்றுத் தருவதில்லையா?
கல்வி நிறுவனங்கள் மூலமாகவும், தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் கற்றுத் தருவதைப் போலவே, தனிநபர் ஒருவர் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருந்தால் அவர்களுக்கும் கற்றுத் தருகிறோம். இதற்காக எங்களுடைய சென்னை அண்ணா நகர் மையத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

வாரக் கடைசி நாட்களான சனி, ஞாயிறுகளில் இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை இருக்கும் என்பதால் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் இந்த வகுப்புகளை நடத்துகிறோம்.
ஜப்பானிய மொழிக்கான தேர்வுகளை நடத்துகிறீர்களா?
நாங்கள் நேரடியாகத் தேர்வு எதையும் நடத்துவதில்லை. ஜப்பானிய மொழியில் திறனறியும் தேர்வு ( JLPT) ஜப்பான் அரசால் நடத்தப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வை நடத்துகிறது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் அவர்கள் ஒரு ஸர்டிபிகேட் தருவார்கள். அது இருந்தால்தான் ஜப்பானிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தத் தேர்வு நான்கு லெவல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நான்காவது லெவல் என்பது ஆரம்பநிலை. மூன்றாவது, இரண்டாவது, முதலாவது நிலைகள் படிப்படியாக ஆழமாக ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதைக் குறிக்கும். முதல் நிலை பயின்ற ஒருவர் ஜப்பானிய மொழியில் இருந்து பிறமொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து ஜப்பானிய மொழிக்கும் மொழிபெயர்க்கும் திறனைப் பெற்றுவிடுவார். மூன்றாவது நிலை வரை படித்தவரால் ஜப்பானிய மொழியில் பேசவும் எழுதவும் முடியும்.
பொதுவாக ஸôஃப்ட்வேர் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை செய்ய நான்காவது, மூன்றாவது நிலை வரை படித்தால் மட்டும் போதும்.
எந்த நிறுவனத்திற்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டால் போதும். எவ்வளவு நாளில் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ள முடியும்?
நான்காவது நிலை, மூன்றாவது நிலை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள ஒவ்வொன்றுக்கும் 150 மணி நேரங்கள் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இரண்டாவது மற்றும் முதலாவது நிலை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள ஒவ்வொன்றுக்கும் 300 மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
நேரடி வகுப்புகள் தவிர வேறு எந்த முறையில் கற்றுத் தருகிறீர்கள்?
ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ள தொலைதூரக் கல்வி முறையையும் பயன்படுத்துகிறோம். இதற்கான தொடர்பு வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான்கு மணி நேரம் நடைபெறும். இணைய தளம் மூலமாகவும் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.

ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வதற்கு புத்தகங்கள் தருகிறோம். கூடவே சிடியும் தருகிறோம். அந்த சிடியில் ஜப்பானிய எழுத்துகளை எழுதுவது எப்படி என்பதும், அவற்றை எப்படி உச்சரிப்பதும் என்பதும் கற்றுத் தரப்படும்.

எங்களுடைய ஆசிரியர்கள் ஜப்பானியர்கள். அவர்கள் ஜப்பானின் இயற்கைத்தன்மை மாறாமல் ஜப்பான் நாட்டுப் பாணியிலேயே பேசுவதற்குக் கற்றுத் தருகிறார்கள். இதனால் எங்களிடம் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டவர்கள் ஜப்பானிய நிறுவனங்களில் வேலை செய்வது மிக எளிதாகிவிடுகிறது.

எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறீர்கள்?
நான்காவது நிலை, மூன்றாவது நிலை இரண்டும் பயில ரூ.17 ஆயிரம் ஆகிறது. அனைத்துநிலைகளையும் கற்றுக் கொள்ள ரூ.67 ஆயிரம் ஆகிறது.
ஜப்பானுக்குச் சென்று நேரடி பயிற்சி பெற முடியுமா?
ஜப்பானிய மொழியை எங்களின் மூலமாகக் கற்றுத் தரும் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் ஜப்பானில் உள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. வேலைவாய்ப்புக்கு அவை உதவுகின்றன.

ஜப்பானிய பல்கலைக் கழகங்களுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதனால் இங்குள்ள மாணவர்கள் குறிப்பிட்ட காலம் வரை அங்கு சென்று நேரடிப் பயிற்சி பெற முடியும்.

ஜப்பான் மொழியின் உச்சரிப்பு நமது தமிழ்நாட்டு மாணவர்களுக்குச் சிரமம் அல்லவா?
ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்வது ஆங்கிலம் கற்றுக் கொள்வதைவிட மிக எளிது. காரணம் தமிழில் உள்ள வாக்கிய அமைப்புகளைப் போலவே ஜப்பானிய மொழியின் வாக்கிய அமைப்புகள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ளதைப் போலத் தலை கீழாக இல்லை.
நன்றி: தினமணிக்கதிர்
Thursday, May 29, 2008 | 1 comments | Labels: ,

1 comments:

  1. வடுவூர் குமார்
    November 9, 2008 at 5:19 AM

    SRM கல்லூரியிலும் சொல்லித்தருகிறார்கள்.